கடலூர் மாவட்டம் கடலோர பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. மீனவர்கள் அனைவரும் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். பரங்கிப்பேட்டை கடலோர பகுதியான அன்னங்கோவில், முடசல் ஓடை, சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன் பேட்டை, அய்யம்பேட்டை, அன்னப்பன்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பேட்டோடை, பெரியக்குப்பம், கிள்ளை, முழுக்குதுறை, எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால் ஆகிய இடங்களில் உள்ள மீனவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட பெரிய படகுகள், நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகள், கட்டுமரங்கள் வைத்து மீன்பிடித்து வருகின்றனர்.
இதையடுத்து அப்பகுதி மீனவர்கள் வெள்ளாற்றின் முகத்துவாரத்தை ஆழப்படுத்தி, அன்னங்கோவில் கிராமத்தில் மீனவர்களுக்கு மீன் ஏலம் விடும் தளம், மீன் விற்பனை கூடம் மற்றும் வலை பின்னும் கூடம் போன்ற வசதிகளை செய்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, தமிழக அரசு சுனாமி அவசர கால நிதி திட்டத்தின் கீழ் உலக வங்கி நிதி மூலம் சுமார் ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, முதற்கட்டமாக வெள்ளாற்றின் முகத்துவாரத்தை அழப்படுத்தி, அங்கு மணல் முகத்துவாரத்திற்குள் வராமல் தடுக்கும் வகையில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டது. இதையடுத்து, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
மேலும், வத்தக்கரை அன்னங்கோவில் கடற்கரையில் படகு நிறுத்துமிடம், மீன் ஏலம் விடும் கூடம், மீன் உலர வைக்கும் தளம், உணவகம், வாகனங்கள் நிறுத்துமிடம் என பல வசதிகளுடன் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனால் அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த புதிய வசதிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துகள்....